Wednesday, December 21, 2005

 

சொர்க்கத்திற்கு செல்லும் வழி - கதை

ஒரு துறவி கடற்கரையில் அமர்ந்து கடலின் அலை ஓசையில் கண்மூடி லயித்திருந்தார். அப்போது ஒரு சாம்ராஜ்ய சக்கரவர்த்தி அங்கு வந்தான். அங்கு அந்த துறவியை கண்டு அவரது அருகில் வந்த அவன் அவரிடம் சொர்க்கம் மற்றும் நரகத்திற்கு செல்லும் வழியை கூறுமாறு கூறினான். அவனும் அவனது படைகளும் மிகுந்த சத்தம் எழுப்பிய போதும் அது அந்த துறவியை எந்த விதத்திலும் கவனத்தைக் கவராதது போல அந்த துறவி அமர்ந்திருந்தார். எரிச்சலுற்ற சக்கரவர்த்தி மீண்டும் அந்த துறவியிடம் அந்த கேள்வியை கேட்டான். இப்போதும் அந்த துறவி எந்த சலனமும் காட்டவில்லை. அத்தனை பேர் முன்னிலும் தன்னை அவமானப்படுத்திய அந்த துறவியின் மீது கடும் கோபம் கொண்டான் சக்கரவர்த்தி. உறையிலிருந்த தன் வாளை உருவி ஓங்கினான். அந்த துறவி இன்னும் கண்ணை விழிக்காமலே அவரிடமிருந்து பலத்த சிரிப்பு சத்தம் கேட்டது. திடுக்குற்ற சக்கரவர்த்தி ஓங்கிய வாளை அப்படியே நிறுத்தி கோபம் மாறாத கண்களுடன் துறவியை உற்றுப் பார்க்க அவர் சொன்னார், இது தான் நரகத்திற்கு செல்லும் வழி . சக்கரவர்த்தி தலையை குனிந்தான். வாளை கீழே போட்டு விட்டு அவர் முன்னால் மண்டியிட்டு தன்னுடைய அவசர புத்தியை மன்னிக்குமாறு கோரினான். இப்போது துறவி கண் விழித்து சொன்னார், இது தான் சொர்க்கத்திற்கு செல்லும் வழி.
என்னுடைய கமெண்ட் : அதிகார வர்க்கத்தில் உள்ளோருக்கு இந்த விழிப்பு வந்து விட்டால் நாட்டில் பல குழப்பங்கள் இருக்காது என்று தோன்றுகிறது.

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]